சென்னையை அதிரவைத்த.. கூட்டுப் பாலியல் பலாத்காரம்.. டியூசன் சென்ற மாணவிக்கு ஷாக்

அரசியல் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

சென்னை: சென்னையில் உள்ள தாழம்பூர் அருகே டியூசனுக்குச் சென்ற மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் வாயைக் கட்டி கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக காவல் துறையினர் 23 வயதான சுந்தர் மற்று இரு சிறுவர்கள் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பிரச்னைக்குள் ஓய்வதற்குள் மகாராஷ்டிர மாநிலம், தானேவில் 4வயது சிறுமிகளுக்கு பள்ளி பாதுகாவலரே பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் போராட்டத்தை வெடிக்கச் செய்தது.

அச்சம்பவங்களைத் தொடர்ந்து, சென்னை அருகே 11 ஆம் வகுப்பு மாணவியை சிறுவர்கள் உட்பட 3 பேர் வாயைக் கட்டி கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள தாழம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 11 ஆம் வகுப்பு மாணவி. இவர் தினமும் பள்ளிக்குச் சென்றுவிட்டு டியூசன் செல்வது வழக்கம். டியூசன் 7.30 மணிக்கு முடிந்துவிடுமாம். இந்நிலையில், வழக்கம்போல டியூசனுக்குச் சென்ற மாணவி எப்போதும் வீட்டுக்குத்திரும்பும் நேரத்தில் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, மாணவியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் மாணவியைத் தேடியுள்ளனர்.

அக்கம்பக்கம், அவர் வரும் சாலை என அனைத்துப் பகுதிகளில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இதையடுத்து, மாணவியின் டியூசன் சென்டரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அப்போது, டியூசன் ஊழியர்கள் மாணவி இரவு 7.15 மணிக்கே சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். பின்னர், மாணவியின் நண்பர்கள் வீடுகளில் அவரைத் தேடியுள்ளனர். ஆனாலும், அவரை எங்கு தேடியும் காணவில்லையாம். இதனால், மாணவியின் பெற்றோர் கடும்அச்சமடைந்து பல்வேறு பகுதிகளில் அழுதுகொண்டே தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், இரவு 9 மணியளவில் மாணவி ஆடைகள் கிழிந்த நிலையில், உடல் முழுவதும் காயங்களுடன் வீடு திரும்பியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தாழம்பூர் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் குழந்தைகள் நலக் குழு அதிகாரிகளுக்கு தகவல் அளித்துவிட்டு மருத்துவமனைக்கு வந்து மாணவியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாணவியின் வீட்டில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. மூன்று பேர் மாணவியை ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்று பலமுறை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் மாணவி சுயநினைவை இழந்துள்ளார். மீண்டும் சுயநினைவு திரும்பியதையடுத்து மாணவி வீட்டுக்கு வந்துள்ளார்.

சிறுமி அளித்த தகவலின்பேரில் 23 வயதான சுந்தர் மற்றும் இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிட்லம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு போக்சோ வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *