பத்திரிகை பொதுநலத்திற்காகவா? அல்லது சுயநலத்திற்காகவா? எதற்கு? பொதுமக்களுக்கு உண்மைதெரியுமா?

இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

பத்திரிகை என்பது சிறிய பத்திரிக்கையாக இருந்தாலும், பெரிய பத்திரிகையாக இருந்தாலும், வெளியிடும் செய்திகள், கருத்துக்கள், கட்டுரைகள், போன்றவற்றில் உண்மை, சமூக நன்மை, தேசத்தின் பாதுகாப்பு ,கலாச்சார பண்பாடு, ஊழல் தடுப்பு, போன்ற அனைத்தும் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் தளமாக இருப்பது தான் பத்திரிகை.

 ஆனால் ,வியாபார நோக்கத்துடன் ,அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகத்திற்கு ஒத்து ஊதும் பத்திரிகைகளுக்கு மட்டுமே, அரசின் சலுகை விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு, பொதுநல நோக்கத்துடன் செயல்படும் பத்திரிகைகளுக்கு 50 ஆண்டு காலமாக எந்த சலுகை, விளம்பரங்களும் கொடுக்காமல், சர்குலேஷன் என்ற ஒரு தவறான விதிமுறையால், மக்களுக்கு உண்மைகள் போய் சேராமல் உள்நோக்கத்துடன் செய்தித் துறையின் கட்டுப்பாட்டில் இவை இருந்து வருகிறது.

 இது மக்களின் வரிப்பணத்தில், கோடிக்கணக்கில் இந்த சலுகை விளம்பரங்கள் இந்த பத்திரிகைகளுக்கு கொடுத்து, ஆட்சியாளர்களை புகழ்ந்தும், பாராட்டியும் காலம் தள்ளும் சூழ்நிலைதான் இன்றைய பத்திரிகை துறை. இதில் பெரிய பத்திரிகை என்று சொல்லிக் கொள்வது வெட்கக்கேடான ஒன்று. நாட்டில் யாருக்காக பத்திரிகை நடத்துகிறோம்? எதற்காக நடத்துகிறோம்? ஏன் நடத்துகிறோம்? பொய்யை விளம்பரப்படுத்துவதற்கு பத்திரிகைகள் தேவையில்லை. உண்மையை வெளிப்படுத்துவதற்கு தான் பத்திரிக்கை தேவை.

 இந்த நிலை இல்லாததால் தான், நாட்டில் கேவலமான அரசியலும், ஊழலும், ரௌடியிசமும், இன்றைய அரசியலில் பெருகியதற்கு இந்த பெரிய பத்திரிகைகள் என்று சொல்லக்கூடிய ஜால்ரா ஊடகங்கள் மிக முக்கிய காரணம். நீதிமன்றம், மத்திய அரசு, மாநில அரசு, பத்திரிகை துறை என்றால் அது மக்களின் நலனுக்கான ஒரு துறை என்று தீர்மானிக்க வேண்டும். அது தவிர, அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகைகள், வியாபார நோக்கம் கொண்ட பத்திரிகைகள் ,அவை சர்குலேஷன் அதிகமாக இருந்தாலும் ,அதற்கான சலுகை விளம்பரங்கள் நிறுத்தப்பட வேண்டும். அப்படி நிறுத்தினால் கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது தடுத்து நிறுத்தலாம்.

மேலும், பொது நலனுக்கான பத்திரிகைகள், சமூக நன்மைக்கான பத்திரிகைகள் எது? என்பதை தீர்மானித்து, அதற்கான சலுகை விளம்பரங்கள் கொடுத்தால், மக்களுக்கு அதிக அளவில் எந்த குழப்பமும் இன்றி மக்கள் புரிந்துக் கொள்ளும் அளவில் தெளிவான உண்மையை அவர்களுக்கு கொண்டு போய் சேர்க்க முடியும்.

இப்போது மக்களுக்கு உண்மை எது? பொய் எது? தெரியாமல் இந்த பத்திரிகைகள் குழப்பிக் கொண்டிருக்கிறது.இவை எல்லாம் மக்களின் வரிப்பணத்திலே, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. அதை தடுக்க வேண்டும் என்றால் பொதுநல நோக்கத்தில் உள்ள சிறிய பத்திரிகையானாலும், அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.மேலும்,

மக்கள் அதிகாரத்தின் சார்பில் செய்தித்துறை இயக்குனருக்கு இது பற்றிய உண்மைகளை கடந்த காலங்களில் எடுத்துரைத்தேன். அவர்களும் இவை எல்லாம் உண்மை என்று புரிந்து கொண்டார்கள் .ஆனால், ஆட்சி அதிகாரத்தில் இதற்கு ஒத்துழைப்பார்களா? என்பது தான் அவர்களுடைய முக்கிய கேள்வியாக இருந்தது. அப்படி என்றால் இந்த ஆட்சி மக்களுக்கானதா? அல்லது அவர்களுடைய சுயநலத்திற்கானதா? என்ற கேள்வி நிச்சயம் எழுகிறது.

பொதுநல நோக்கத்துடன் ஆட்சி இருந்தால், எங்களைப் போன்ற பொதுநல நோக்கமுள்ள பத்திரிகைகளை மத்திய, மாநில அரசுகள் நிச்சயம் அங்கீகரிக்க வேண்டும். சர்குலேஷன் என்பது பத்திரிகையின் தரம் அல்ல, சர்குலேஷன் என்பது பொதுநலத்தின் உண்மைத்தன்மை அல்ல, சர்குலேஷன் என்பது மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதல்ல ,அவையெல்லாம் பணத்தால் காட்ட முடியும்.

ஆனால், சப்ஜெக்ட் வேல்யூ உள்ள பத்திரிகைகள், பொதுநல நோக்கத்துடன் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், உண்மை செய்திகள், இதன் அடிப்படையில் தான், ஒரு பத்திரிகையின் தரம் பிரிக்க வேண்டும் .அதற்கு மட்டுமே சலுகை விளம்பரங்கள் கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாட்டில் ஊழல் அற்ற ஆட்சியை ஏற்படுத்த முடியும். அப்போதுதான் மக்களுக்கான ஆட்சியை அதிகாரிகள், ஆட்சியாளர்கள் கொடுத்து செயல்படுவார்கள் .இன்று உண்மை செய்திகளை வெளியிட்டாலும், ஆட்சியாளர்கள், மாவட்டத்தின் ஆட்சியாளர்கள், அலட்சியம் செய்கிறார்கள். இது ஊழல் ஆட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, வாக்களித்த மக்களை ஏமாளிகளாக ஆக்கும் வேலை.தவிர ,இது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் விரோதமானது.

மேலும்,எங்களைப் போன்ற பத்திரிகைகள் இன்று ஆன்லைனில்  வியாபார நோக்கம் இன்றி, சமூக நன்மைக்காகவும், பொது நலனுக்காக வெளியிடும் செய்திகளை கூட அலட்சியப்படுத்தும் அதிகாரிகள், ஆட்சியாளர்கள், தங்கள் சுயநலத்திற்காக தான் பத்திரிகை என்று நினைத்து விட்டார்கள். ஒரு சில நேரங்களில் நானே நினைக்கிறேன்.

எதற்காக இந்த பத்திரிகை நடத்துகிறோம்? எங்களுக்காகவா? இதனால் எத்தனை லட்சம்? எத்தனை கோடி? நாங்கள் சம்பாதிக்கிறோம்? இதனால் எவ்வளவு வீட்டில் பிரச்சனைகள்? இதையெல்லாம் சுமந்து, பொது நலனுக்காகவும், சமூக நன்மைக்காகவும் ,பல எதிர்ப்புகளை இன்றைய அரசியலில் சம்பாதித்து, ஏன் பத்திரிகை நடத்த வேண்டும்?

எங்களுக்கு பத்திரிகை நடத்த மத்திய அரசு எதற்காக RNI கொடுத்துள்ளது? அதற்கு அர்த்தம் தெரியாமல் சென்னையில் RNI வாங்கினால் தான், நாங்கள் அரசு அடையாள அட்டை கொடுப்போம். எந்த அளவுக்கு இவர்களுடைய சுயநலம், பத்திரிகை துறையில் இருக்கிறது என்பது தலைமைச் செயலகத்தில் உள்ள பத்திரிகைத்துறை அதிகாரிகளே, சிலர் என்னிடம் தெரிவித்து இருக்கிறார்கள்.

அதனால், அவர்களுடைய அறிவுத்திறமையை இந்த பத்திரிகை துறையின் சார்பாக பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். இப்படிப்பட்ட அதிகாரிகளால், எங்களைப் போன்ற பத்திரிகைகள், எப்படி வளர்ச்சி அடைந்து, அது சமூக நன்மைக்காக, மக்களின் நலனுக்காக, உண்மையான செய்திகளை அதிக அளவில் மக்களுக்கு எப்படி கொண்டு செல்ல முடியும்?

 மேலும், பத்திரிகை துறைக்கு தகுதியற்ற சில பத்திரிகைகளும் ,போட்டி போடுவது மட்டுமல்ல, செய்தியாளர்களும் அதே நிலையில் தான் போட்டி போடுகிறார்கள். இதையெல்லாம் தரம் பிரித்தால், இந்த துறையை சீர் செய்ய முடியும். ஆட்சி, அதிகாரம் சுயநலத்திற்காக இல்லாமல், மக்கள் நலனுக்காக இருந்தால், நிச்சயம் இவையெல்லாம் மாற்ற முடியும்.

ஆனால், சுயநலத்திற்காக இருக்கும் போது ,அங்கே சுயநல பத்திரிகையாளர்களுக்கும் பத்திரிகைகளுக்கும் அவர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள். இந்த விஷயத்தில் மத்திய அரசு மற்றும் நீதிமன்றம் ஒரு தெளிவான வரை முரையோடு பொதுநல நோக்கோடு இந்தத் துறையை சீர் செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் வைக்கின்ற முக்கிய கோரிக்கையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *