
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் வரும் ஜூன் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆறுபடை முருகனின் திருவடிகளில் ஆறு கோரிக்கை வேண்டுதலாக சமர்ப்பிக்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார் .
மேலும், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காக்க, காக்க முருகவேல் காக்க! ஓம் சரவணபவ !குறிஞ்சி நிலத் தலைவன், கோலமயில் வாகனன், கோடி பக்தர்களின் மனதில் சிம்மாசனம் இட்டு, அமர்ந்தவன்.
எம்பெருமான் முருகனுக்கு உகந்த கிருத்திகை திருநாளில் வரும் 22ஆம் தேதி முருக பக்தர்கள் சார்பாக மதுரை மாநகரில் முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடத்தப்பட உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
முருகப்பெருமானின் அருள் ஆசியுடனும், அவருடைய ஒத்துழைப்புடனும் இந்த மாநாடு மாபெரும் வெற்றி அடைய இன்று முதல் ஜூன் 22 ஆம் தேதி வரை தான் விரதம் மேற்கொள்வதோடு, ஆறுபடை நாயகனின் திருவடிகளில் ஆறு முக்கிய கோரிக்கைகளை வேண்டுதலாக சமர்ப்பிக்க உள்ளேன்.

1. தமிழ் தமிழ் கலாச்சாரம் பாரம்பரியம் மற்றும் ஆலயங்களை பேணிக்காத்தல்.
2. 2047 க்குள் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதன் மூலம் வளமான தமிழகத்தை உருவாக்குதல்.
3. பெண்களுக்கு பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்குதல்.
4. போதைப்பொருள் இல்லாத தமிழகமாக மாற்றுதல்.
5. சமூக நல்லிணக்கத்தையும் பின் தங்கிய சமூகங்களுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்தல்.
6. விவசாயிகள் நலனையும், கிராமப்புற விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் விவசாயத்தை மேம்படுத்துதல்.
இந்த ஆறு கோரிக்கைகளை அறுவடை முருகனிடம் வேண்டுதலாக வைத்த கோரிக்கை.
மேலும், இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு எத்திசையிலும் உள்ள முருக பக்தர்கள் அனைவரும் கந்தனிடம் வேண்டிக் கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன்.
பக்தர்களின் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் வேலவன்! நமது கவலைகளை தீர்க்க அருள் புரியட்டும். இவ்வாறு தமிழக பாஜக மாநில தலைவர் நாயனார் நாகேந்திரன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.