ஆகஸ்ட் 28, 2024 • Makkal Adhikaram

வீரபாண்டி: நிருபரை ஜீப்பில் ஏற்றி ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்ற விவகாரத்தில், 2 போலீசார், ஆயுதப்படைக்கு இடமாற்றப்பட்டனர்.சேலம் மாவட்டம் நாழிக்கல்பட்டியை சேர்ந்தவர் யுவராஜ், 25. சென்னையில், தனியார், ‘டிவி’யில் நிருபராக பணிபுரிகிறார். சொந்த ஊர் வந்த அவர், நேற்று மதியம், 1:30 மணிக்கு, ஆட்டையாம்பட்டி – காகாபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., ராமன், போலீஸ்காரர் ராமச்சந்திரன் ஆகியோர், சரக்கு வாகனங்களை தடுத்து நிறுத்தி வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதை, யுவராஜ் மொபைல் போனில் படம் பிடித்தார்.
இதுகுறித்து போலீசார் கேட்டபோது, நிருபர் என தெரிவித்துள்ளார். ஆனால்,அவர் மீது சந்தேகமாக இருந்ததால் போலீசார், யுவராஜை ஜீப்பில் ஏற்றி ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்றனர். இத்தகவல் சேலம் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு கவனத்துக்கு சென்றது. இதையடுத்து விசாரித்த அவர், இரு போலீசாரையும் உடனே ஆயுதப்படைக்கு இடமாற்றி உத்தரவிட்டார்.